உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை: மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை!!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை குற்றம் அதிகம் நிகழும் மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துக் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்திற்கு போலீசாரும் உறுதுணையாக இருந்ததையடுத்து, நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்காமல் யோகி ஆதித்யநாத் அரசு வேடிக்கை பார்த்து வருவதாக பல்வேறு சமூக அமைப்பினர் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூன்று பேர் மாட்டுக்குத் தீவனம் வாங்க புதன்கிழமை மதியம் கடைவீதிக்குச் சென்றுள்ளனர். ஆனால் மாலைநேரம் ஆகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது, சிறுமிகள் மூன்று பேரும் தங்களது சொந்த வயலில் துப்பட்டாவால் ஒன்றாக வாயில் கட்டப்பட்ட நிலையில், கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த மூன்று சிறுமிகளில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன. மற்றொரு சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள கான்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். உயிரிழந்த 2 சிறுமிகள் உள்பட 3 பேரும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், மீட்கப்பட்டனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 3 சிறுமிகளும் 13,16,17 வயதுடையவர்கள் ஆவர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: