காதலியை கொலை செய்த காதலன் கைது

பாகல்கோட்டை: பாகல் கோட்டை மாவட்டம் முதோலு தாலுகா வஜரமட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி பாகவ்வகோலா (22). இவர் பாகல்கோட்டையில் உள்ள நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதனால் பாகல்கோட்டையில் உள்ள வினாயகா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் ஜோதி நர்சிங் பயின்று கொண்டே தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அப்போது அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனீப் என்பவருக்கும் ஜோதிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதல் விஷயம் ஜோதியின் பெற்றோர்க்கு தெரியவந்தது. இதையடுத்து அனிப்பை அழைத்த ஜோதியின் பெற்றோர் நாங்கள் தலித் இனத்தை சேர்ந்தவர்கள் எங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள உங்கள் வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். எனவே என் ஜோதியை மறந்து விடும்படி கூறியுள்ளனர்.

அதன் பிறகு ஜோதி அனீப்பை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். ஜோதி தன்னிடம் பேசாததால் ஆத்திரமடைந்த அனீப்  பேச வேண்டும் என்று கூறி கடந்த பிப்.13ம் தேதி ஜோதியை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது ஜோதிக்கும் அனீப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அனீப் ஜோதியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின் சடலத்தை பட்டபிரபா நதியில் வீசிவிட்டு வந்துவிட்டார்.

பட்டபிரபா நதியில் ஜோதியின் சடலம் இருப்பதை கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பாகல்கோட்டை போலீசார் சடலத்தை மீட்டனர். தன் மகளின் சாவுக்கு காதலன் அனீப்தான் காரணம் என்று ஜோதியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அனீப்பை பிடித்து விசாரித்ததில் அவர் ஜோதியை கொலை செய்து நதியில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அனீப்பை கைது செய்த போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: