அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்-அருப்புக்கோட்டை அருகே பரபரப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 565 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 22 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனாவுக்கு முன் கல்லூரியில் காலை 9.10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வகுப்பு நடந்தது. தற்போது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்பு நடக்கிறது.

இதில் பழைய முறையை தொடர வேண்டும், கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது, குடிநீர், சாலை வசதி செய்து தர வேண்டும், முக்கியமாக கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, தூத்துக்குடி நான்கு வழிச்சாலையோரத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும் அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் கண்ணன், கல்லூரி முதல்வர் அன்பழகன் ஆகியோர் வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என கூறியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: