இரட்டை இலக்கத்தில் சீட் ஒதுக்கீடு அதிமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் பேச்சுவார்த்தை : பாஜ மாநில தலைவர் முருகன் தகவல்

கோவை: அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என பாஜ மாநில தலைவர் முருகன் கூறினார்.  கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜ மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் எல்.முருகன் அளித்த பேட்டி: பிரதமர் மோடி சென்னை வந்த போது பாஜ. மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தேர்தல் பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. வரும் 25ம் தேதி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார்.

பாஜக சார்பில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும் கலந்துகொள்ள உள்ளார். 21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள பாஜ இளைஞர் அணி மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள உள்ளார். பாஜ-அதிமுக கூட்டணி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும். இரட்டை இலக்கத்தில் தொகுதி பங்கீடு இருக்கும். பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருக்கிறது.  இவ்வாறு முருகன் கூறினார்.

Related Stories: