தமிழகத்தின் வட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் வாட்ஸ்அப் மற்றும் டிவிட்டர் மூலம் புகார் அளிக்கலாம் என்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாதங்களாக பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கள்ளச்சாராயம் மற்றும் எரிசாராயம் கிராமப்புறங்களில் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு என வட மாவட்டங்களில் அதிகளவில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகளவில் இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் குடிமகன்களுக்கு கள்ளச்சாராயம் மற்றும் எரி சாராயம் தான் அதிகளவில் வழங்கப்படுகிறது. இதற்காக மலை மற்றும் ஆற்றுப்படுகையில் கள்ளச்சாராம் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.