சென்னை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகாரை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 23,72,412 தெரு விளக்குகள் எல்.இ.டி.யாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எல்.இ.டி விளக்கு திட்டத்தில் ஊழல் நடத்துள்ளது.
இதனைபோன்று, கொரோனா காலத்தில் மத்திய அரசு அறிவித்த ரூ.5 கிலோ ரேஷன் அரிசியிலும் முறைகேடு நடத்துள்ளதாவும், மத்திய அரசு வழங்கியதில் 5 கிலோ அரிசியை மட்டும் கொடுத்து விட்டு எஞ்சிய அரிசியை ஆலைகளுக்கு விற்றுவிட்டதாக புகார் தெரிவித்தார். இந்த இரு புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் ஒப்புதல் பெற்று விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய நாராயணன், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகாரை விசாரிக்க லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகவும், உணவுத்துறை அமைச்சர் காமராஜர் மீதான புகாரை விரிவாக விசாரித்து தலைமை செயலாளர் புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி புகாரை முடித்து வைத்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை 5 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.