வேலை செய்த வீட்டில் வைர நகை திருட்டு: பெண் கைது

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு (58). தொழிலதிபர். இவரது வீட்டில், அதே பகுதியை சேர்ந்த அம்பிகா (31) என்பவர், வீட்டு வேலை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் வெங்கடேஷ்வரலு, வேலூரில் உள்ள ஒரு கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். மீண்டும் நேற்று முன்தினம் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது அனைவரும், அணிந்திருந்த நகைகளை கழற்றி, பீரோவில் வைத்தனர். அப்போது, நகைகளை மீண்டும் சரிபார்த்தனர். அதில் ஒரு வைர கம்மல், 4 சவரன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசில், வெங்கடேஷ்வரலு புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பீரோவைஉடைக்காமல் நகை திருடு போனதால், வீட்டில் உள்ளவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அங்கு வேலை செய்யும் அம்பிகாவிடம் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். பின்னர், போலீசாரின் தீவிர விசாரணையில், நகைகளை திருடியதை ஒப்பு கொண்டார்.

மேலும் விசாரணையில், சில மாதங்களுக்கு முன் பீரோவின் சாவியை, வெங்கடேஷ்வரலு குடும்பத்தினர் தொலைத்துவிட்டனர். அப்போது, மாற்று சாவி போட்டு பீரோவில் இருந்த ஒரு நகை எடுத்துள்ளார். அதனை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இதனால், மேலும் எடுத்தால் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து நகையை திருடியதை ஒப்பு கொண்டார். அவர்களது மகனின் திருமணத்தில், மருமகளுக்காக வைத்திருந்த வைர கம்மலை திருடியதால், அவர் சிக்கி கொண்டார் என தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து வைர கம்மல் மற்றும் 4 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: