சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசின் செயல்பாட்டால், பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர் ₹90-ஐ கடந்துள்ளது. சென்னையில் நேற்றைய விலையைவிட 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 18 காசுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. இரு சக்கர வாகனங்களைப் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த விலையேற்றம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாகும். அதுபோலவே, டீசல் விலையும் 28 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுக்கு விற்பனையாகிறது. சரக்குப் போக்குவரத்து - பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றுக்கு டீசல் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விலையேற்றம் உள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும், இந்தியச் சந்தையில் பெட்ரோல்-டீசல் விலை குறைவதேயில்லை.