சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிற்கு சரக்கு விமானம் புறப்பட தயாரானது. அதில் ஏற்ற வந்த பார்சல்களை விமான நிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சென்னையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து டிஜிட்டல் எடை மிஷின்கள் அடங்கிய 7 பார்சல்கள் தோகாவிற்கு அனுப்ப வந்திருந்தன. அந்த பார்சல்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவற்றை பிரித்து சோதனையிட்டனர். அந்த 7 பார்சல்களில் 54 டிஜிட்டல் எடை கருவிகள் இருந்தன. அதன் உள்பகுதிகளில் 4.44 கிலோ உயர் ரக கஞ்சா, 700 கிராம் மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருள் மற்றும் 1.2 கிலோ போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.