தக்கலை: குமரி மாவட்டம் தக்கலை டிராபிக் போலீசார் எஸ்ஐ குருநாதன் (52) தலைமையில் நேற்று முன்தினம் மாலை அழகியமண்டபம் பகுதியில் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் சைகை செய்து நிறுத்துமாறு கூறினர். ஆனால் வேகமாக தப்ப முயன்றனர். இதையடுத்து எஸ்ஐ குருநாதன் மற்றும் போலீஸ்காரர் பீட்டர் ஆகியோர் பைக்கை நிறுத்த முயன்றனர். பைக்கில் பின்னால் இருந்த ஒரு வாலிபர், இத்தோடு செத்து தொலைந்து போ என கூறியவாறு எஸ்ஐயை காலால் எட்டி உதைத்தார். மற்றொரு வாலிபர், போலீஸ்காரரை எட்டி உதைத்துள்ளார். பிடிக்க முயன்ற எஸ்ஐ மீது பைக்கால் மோதி விட்டு மூவரும் தப்பினர்.