சத்தி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.4.15 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.4.15 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, கெம்பநாயக்கன்பாளையம், அரியப்பம்பாளையம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்டுள்ள வாழைத்தார்களை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் நடைபெறும் வாழைத்தார் ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்கு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூவன், செவ்வாழை, தேன் வாழை உள்ளிட்ட 1,890 வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வாழைத்தார்களை ஏலம் எடுக்க கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலத்தில் கதலி வாழை கிலோ ரூ.18, நேந்திரன் கிலோ ரூ.15, தேன் வாழை தார் ஒன்று ரூ.460, செவ்வாழை ரூ.610, பூவன் ரூ.330, ரஸ்தாலி ரூ.480, ரொபஸ்டா ரூ.315, மொந்தன் ரூ.180, பச்சை நாடன் ரூ.275 ஏலம் போனது. மொத்தம் 1,890 வாழைத்தார்கள் ரூ.4.15 லட்சத்துக்கு விற்பனை ஆனது.  இதில், செவ்வாழை, ரஸ்தாளி, தேன்வாழை ரக வாழைத்தார்கள் நல்ல விலைக்கு ஏலம் போனதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: