மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே எரி சாராயம், போலி மதுபாட்டில்கள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டவரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மதுராந்தகம் அடுத்த ஜல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (45). அப்பகுதியில் தொடர்ந்து எரி சாராயம் மற்றும் போலி மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இதையறிந்த மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன், மேற்கண்ட பகுதியில் சோதனை நடத்தி, சாராயம் விற்ற முருகனை கையும் களவுமாக கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஏற்கனவே பலமுறை சாராய விற்பனையில் முருகன் கைது செய்யப்பட்டதால், தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடும் அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி கண்ணன், கலெக்டர் ஜான்லூயிசுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், முருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.