திருச்சி ஏர்போர்ட் அருகே நள்ளிரவு கோயிலில் காவலாளியை வெட்டி அம்மன் தாலிகாசு, பணம் கொள்ளை

திருச்சி: திருச்சி ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் கோயிலில் காவலாளியை வெட்டி அம்மனின் தாலிகாசு, பணம் கொள்ளை போனது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி விமான நிலையம் அருகே அண்ணா கோளரங்கம் எதிரில் பச்சநாச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் வரும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கை செலுத்துவர். இக்கோயிலில் மாதந்தோறும் 1 முதல் 10ம் தேதிக்குள் கோயில் நிர்வாகம் சார்பில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். இரவு நேர காவலாளியாக கொட்டப்பட்டு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரத்தினவேல்(63) கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இரவு 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இரவு 10 மணிக்கு ரத்தினவேல் பணிக்கு வந்தார்.

இந்நிலையில் நள்ளிரவு பேண்ட் மற்றும் கைலி அணிந்து அரிவாளுடன் 2 மர்ம நபர்கள் கோயிலுக்குள் வந்தனர். மர்மநபர்களை பார்த்த ரத்தினவேல் சத்தம் போட்டுள்ளார். மர்மநபர்கள் சத்தம் போடாதே என கூறி, அரிவாளால் ரத்தினவேலின் தலையில் வெட்டினர். இதில் மயங்கி கீழே விழுந்த அவரது கை, கால்களை முன்பக்கமாக அவரது வேட்டியால் கட்டிப்போட்டனர். பின்னர் அவரது சட்டை பாக்கெட்டிலிருந்த 4500ஐ எடுத்துக்கொண்டனர். கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த 2 ஆயிரம், மூலஸ்தானத்தில் அம்மன் கழுத்திலிருந்த 2 கிராம் தங்ககாசு ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச்சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் மயக்கம் தெளிந்த ரத்தினவேல் கை, கால்களை தானே அவிழ்த்து பார்த்தபோது கோயில் உண்டியல், கருவறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஏர்போர்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. பின்னர் போலீசார் படுகாயமடைந்த ரத்தினவேலை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எப்போதும் போக்குவரத்து அதிகம் உள்ள புதுக்கோட்டை மெயின்ரோட்டில் காவலாளியை வெட்டி கோயிலில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: