புதுடெல்லி,பிப்.4: குடியரசு தினத்தன்று நடந்த செங்கோட்டை வன்முறை சம்பவம் தொடர்பாக நடிகர் தீப் சித்து மற்றும் மூன்று பேரை கைது செய்ய தகவல் தெரிவிப்போருக்கு ₹1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்து நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்தினர். அங்கிருந்து செங்கோட்டை நோக்கி நகர்ந்தனர். சிலர் டிராக்டர்களை செங்கோட்டை நோக்கி ஓட்டிச்சென்றனர். பின்னர் போராட்டக்காரர்களில் சிலர் செங்கோட்டையின் மீது ஏறி அங்கிருந்த தேசியக்கொடியை அகற்றிவிட்டு சீக்கியர்களின் மதக் கொடியான ‘நிஷான் சாஹிப்’ கொடியினை பறக்கவிட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, சீக்கியர்கள் கொடியினை ஏற்றியதில் தவறு இல்லை என்றும், அந்த கொடியினை தமது ஆதரவாளர்கள் தான் ஏற்றியதாகவும் பஞ்சாப் மாநில நடிகர் தீப் சித்து பகிரங்கமாக பேட்டியளித்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய தேடி வருகினன்றனர்.