பெங்களூரு: பெங்களூருவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை காண இந்தியா மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள். அதன்படி இவ்வாண்டிற்கான 13வது சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடங்கி 5ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. அதன்படி பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை பயிற்சி மைதானத்தில் 13-வது சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் மிக் 17 ரக ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து அணிவகுத்துச் சென்றனர். விமான கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்த சாரங்க் ஹெலிகாப்டர்கள், சூரியகிரண் விமானங்கள், டகோடா, சுகோய், ரபேல், எல்சிஎச், எல்யூஎச், ஜாக்வர், ஹாக், பைட்டர் ஜெட், ஏர்கிராப்ட் ஹெலிகாப்டர்கள் சாகசம் செய்கின்றன.இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 63 விமானங்கள் சாகசங்கள் செய்கின்றன. இதில் 42 விமானங்கள் தினமும் இருமுறை சாகசத்தில் ஈடுபடுகிறது.