சினிமா பாடலாசிரியர் தொடர்ந்த அவதூறு வழக்கில் கங்கனாவுக்கு சம்மன்: மும்பை நீதிமன்றம் உத்தரவு

மும்பை: இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இ்ந்தி திரையுலக பிரபலங்களை நடிகை கங்கனா தொடர்ந்து விமர்சித்தார். அப்போது நடிகர் ஹிருத்திக் ரோசனுடனான உறவு பிரச்னையில் அமைதி காக்கும்படி தன்னை திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மிரட்டியதாக கூறியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஜாவித் அக்தர் மறுத்தார். இருந்தும், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறி, கங்கனாவுக்கு எதிராக மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த டிசம்பரில் ஜூகு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி, போலீசார் நடிகை கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் போலீசார் முன் ஆஜராகவில்லை. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனாவுக்கு  சம்மன் அனுப்பியும் அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், வரும் மார்ச் 1ம் தேதி கங்கனா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி, அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தது.

Related Stories: