புஞ்சைபுளியம்பட்டி அருகே 2 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய முகமூடி கும்பல்: கார் கண்ணாடி அடித்து உடைப்பு

சத்தியமங்கலம்:   புஞ்சைபுளியம்பட்டி அருகே 2 பேரை இரும்பு கம்பியால் அடித்து அவர்களது காரை உடைத்து சேதப்படுத்திய முகமூடி  அணிந்த 4 பேர் கும்பல் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் பண்ணைத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கோவை  மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கந்தவேல் (45), இவரது மனைவி ரமாபிரபா இருவரும் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கந்தவேலின் மகன் பப்ஜி கேமுக்கு அடிமையாகி இதே தோட்டத்துப் பண்ணை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தோட்டத்தில் பெயிண்டிங் வேலை செய்து வரும் ஸ்ரீ ஜெயன் (42) என்பவரும் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு கந்தவேல்,  ஸ்ரீ ஜெயன்  இருவரும் காரில் இரும்பறை பகுதிக்குச் சென்றுவிட்டு மீண்டும் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, கள்ளிப்பாளையம் விவசாய  தோட்டத்தின் கேட் அருகே வந்து காரை நிறுத்தியபோது, திடீரென முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 4 பேர் தங்களின் கைகளில் வைத்திருந்த  இரும்பு கம்பிகளால், காரின் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

இதை பார்த்த கந்தவேல், ஸ்ரீ ஜெயன் இருவரும் காரைவிட்டு இறங்கி அவர்களிடம் சண்டை போட முயற்சித்தனர். அப்போது, முகமூடி அணிந்த 4  பேரும் சேர்ந்து இருவரையும் சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட, கந்தவேலின் மனைவி ரமாபிரபா  மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததை கண்ட மர்ம நபர்கள் தப்பி ஓடி மறைந்தனர். இது குறித்து கந்தவேல் புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த 2 பேரையும்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர். பெயிண்டிங் வேலை செய்து வரும் ஸ்ரீ ஜெயனுக்கு முன்விரோதம் காரணமாக இருந்த எதிரிகள் தாக்க வந்ததாக  கூறப்படுகிறது. அந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் ஈரோடு எஸ்பி. தங்கதுரை சம்பவம்  நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: