கணவனை கொன்றாலும் மனைவிக்கு ஓய்வூதியம் உண்டு: பஞ்சாப் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சண்டிகர்: அரசு ஊழியராக இருக்கும் கணவனை கொன்றாலும் கூட அவரது மனைவிக்கு ஓய்வூதியம் பெரும் உரிமை உண்டு என்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியானா மாநிலம் அம்பலாவைச் சேர்ந்த அரசு ஊழியர் டார்செம்  சிங், கடந்த 2008ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை அவரது மனைவி பால்ஜித் கவுர் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டதால், அவருக்கு 2011ல் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2011ம் ஆண்டு வரை பால்ஜித் கவுர் கணவரின்  வாரிசு என்ற அடிப்படையில் குடும்ப ஓய்வூதியத்தைப் பெற்றார். ஆனால் அவர் குற்றவாளி என்று  நிரூபிக்கப்பட்டதால் அரியானா அரசு அவரது ஓய்வூதியத்தை நிறுத்தியது.

மாநில அரசின் உத்தரவை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு விசித்திரமான  தீர்ப்பை வழங்கியது. அதில், ‘அரசு ஊழியர்  ஒருவரின் மனைவியானவர் விதவையானால் கூட, அவர் மறுமணம் செய்த பின்னரும் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர். தங்க முட்டையிடும் கோழியை யாரும் படுகொலை செய்யமாட்டார்கள். எனவே கணவனைக்  கொன்றாலும்  கூட, மனைவியானவர் குடும்ப ஓய்வூதியத்தை பெற தகுதியுடையவர்தான். குடும்ப ஓய்வூதியம்  என்பது அரசு ஊழியர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியாகும்.

ஒரு கிரிமினல் வழக்கில் மனைவி மீது குற்றம்  சாட்டப்பட்டாலும் கூட, மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் ெபற உரிமை உண்டு. எனவே, அரியானா மாநில அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாருக்கு நிலுவையில் உள்ள  தொகையுடன் அவருக்கான குடும்ப ஓய்வூதியத்தை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். கணவர் இறந்த பிறகு, சி.சி.எஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1982 இன் கீழ் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு’ என்று தீர்ப்பில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: