தெலுங்கானா: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை நிதி எங்கே போகிறது என்று கேள்வி எழுப்பிய தெலுங்கானா ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வீட்டின் மீது பாஜக-வினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பரக்காலா எம்.எல்.ஏ. தர்மா ரெட்டியின் வீடே தாக்குதலுக்கு உள்ளானது. பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ராமர் கோயில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதி குறித்த வெளிப்படை தன்மையை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனால் ஆவேசமடைந்த பாரதிய ஜனதா கட்சியினர், எம்.எல்.ஏ. தர்மா ரெட்டி வீட்டை முற்றுகையிட்டனர். ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் எம்.எல்.ஏ. தர்மா ரெட்டி வீட்டின் மீது கற்கள், முட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.