ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு அனைத்து கல்லூரிகளும் 8ம் தேதி திறப்பு: 9, 11ம் வகுப்புகளுக்கும் அனுமதி; தியேட்டர்களில் இன்று முதல் 100%; பெட்ரோல் பங்க்குகள் முழுநேரம் இயங்கும்

சென்னை: தமிழகத்தில் கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளும், விடுதிகளும் 8ம் தேதி முதல் செயல்படலாம். அதேபோல 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளும் செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் பங்க்குகள் நேரக்கட்டுப்பாடு இன்றி திறந்து இருக்கலாம். கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் 50 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்பன உள்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கையாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நோய்த் தொற்று விகிதம் கடந்த இரண்டு வாரமாக, ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 550 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்தில் இருந்து தற்போது 4,629 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 29ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், அதிகாரிகள் தெரிவித்த ஆலோசனைகளின் பேரில், தற்போதுள்ள நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக 31ம் தேதி முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன், பிப்ரவரி 28ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:

*  கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8ம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* பள்ளிகள் (9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும்) பிப்ரவரி 8ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* இரவு 10.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.  

* மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும்  100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

* கண்காட்சிக் கூடங்கள் செயல்படலாம்.

* உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் பங்கேற்கும் வகையில் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள், இன்று முதல், நடத்த அனுமதிக்கப் படுகின்றன. திறந்தவெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பொறுத்தவரையில் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகளுடன் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நடைமுறை தொடரும்.

* விளையாட்டு நிகழ்ச்சிகளில் (கிரிக்கெட் உட்பட), அதிகபட்சம் 50 சதவிகிதம் இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

* ராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்: மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* கிரிக்கெட் உட்பட விளையாட்டு போட்டிகளை காண 50% பார்வையாளர்களுக்கு அனுமதி.

* ராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதி.

* நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

* கண்காட்சிக் கூடங்கள் செயல்படலாம்.

Related Stories: