கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளிய பொக்லைனை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பட்டறைபெருமந்தூர் அடுத்த மேல்விளாகம் அருகே கொசஸ்தலை ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கடந்த சில நாட்களாக இரவில் 10க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மேல்விளாகம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர், நேற்றுமுன்தினம் இரவு ஆற்றுக்கு மணல் அள்ள வந்த 2 பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று தான் இரவில் மணல் எடுப்பதாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் நீராதாரம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: