ஓபிசி தொகுப்பு இடஒதுக்கீடு நீதிபதி ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27% இட ஒதுக்கீட்டில், தொகுப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ரோகிணி ஆணையத்தின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. ஆனால், இன்று வரை ஆணையத்தின் பரிந்துரை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையம் அடுத்த 3 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

இன்று வரை மொத்தம் 9 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு விட்டது. அதற்கு பிறகும் நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பது என்பது சுமார் 2000 சாதிகளுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகம் ஆகும். எனவே, நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலத்தை இனியும் நீட்டிக்கக்கூடாது. ஆணையத்தின் பரிந்துரை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுத்து அடுத்த சில நாட்களில் தாக்கல் செய்யும்படி நீதிபதி ரோகிணி ஆணையத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: