தொழிலதிபரிடமிருந்து ஏர்கன் 22 தோட்டாக்கள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி தொழிலதிபரிடமிருந்து ஏர்கன் மற்றும் 22 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி, தாளமுத்துநகர், சமீர் வியாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (50). தொழிலதிபர். இவர் ‘ஏர்கன்’ வைத்திருப்பதாக தாளமுத்துநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தொழிலதிபர் வீட்டில் நேற்றிரவு தாளமுத்துநகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் .22 விட்டம் உடைய ஏர்கன் மற்றும் சுட பயன்படுத்தும் 22 புல்லட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தொழிலதிபர் ஜெயராஜ் மீது இந்திய ஆயுத தடை சட்டம் 25(1) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, இந்த துப்பாக்கியை அவர் எதற்காக வைத்திருந்தார்? இதை பயன்படுத்தி யாரையாவது அவர் மிரட்டினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கியை வைத்திருக்க உரிமம் தேவையில்லை என்று கூறப்படுகிறது. தூத்துக்குடியில் தொழிலதிபரிடம் ஏர்கன் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: