காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 50 லட்சம் நிலம் மீட்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் உள்பட ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ளன. மேலும் பல்வேறு மடங்களுக்கு சொந்தமான நிலங்களும், காஞ்சிபுரத்தில் ஆங்காங்கே உள்ளன. இந்த நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்துகின்றனர். அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம், சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்துக்கு சொந்தமான சுமார் ₹50 லட்சம் மதிப்புள்ள 2722.5 சதுர அடி இடம் காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகன் கமலக்கண்ணன், நீண்ட நாட்களாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகிறார்.