விமானத்தில் திடீர் கோளாறு எம்பிக்கள், பயணிகள்3 மணி நேரம் தவிப்பு

சென்னை:  சென்னை-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறால் எம்.பி.க்கள் உள்ளிட்ட 129 பயணிகள் 3 மணி நேரம் தவித்தனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. அதில் எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், நவநீதகிருஷ்ணன் உட்பட 129 பயணிகள் செல்ல இருந்தனர். பயணிகள் அனைவரும் இரவு 8.30 மணிக்கு முன்னதாகவே வந்து பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்தையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.

அப்போது, விமானத்தின் இயந்திரங்களை விமானி சரி பார்த்து, தொழில்நுட்ப கோளாறு இருப்பதை  விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு விமானம் பழுது பார்த்து முடிக்கப்பட்டு பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர். விமானம் 3 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

Related Stories: