விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை அகலப்படுத்தும் பணி நிறுத்தம் -வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

சேத்தியாத்தோப்பு : விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை பணிகள் தற்போது கரைமேடு கிராம பகுதியில் நடைபெறாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். நகாய் திட்ட சாலை விரிவாக்க பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலையோரம் இருந்த வீடுகள், கடைகள், நிழற்குடைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டு சாலைப்பணி துவங்கப்பட்டது.

விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை அகலப்படுத்தி உயரமான சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தற்போது சில இடங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது. புவனகிரி ஒன்றியத்துக்குட்பட்ட கரைமேடு-சேத்தியாத்தோப்பு வரை பல இடங்களில் பள்ளங்களும், சில இடங்களில் சரிவு ஏற்பட்டு பெயர்ந்தும் உள்ளது.

இதனால் இருசக்கர வாகனங்களில் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கும்பகோணத்திலிருந்து சேத்தியாத்தோப்பு வழியாக செல்லும் பேருந்துகளும், சிதம்பரத்திலிருந்து புவனகிரி வழியாக சேலம் செல்லும் பேருந்துகள், இதனை தவிர்த்து வடலூர், பண்ருட்டி, கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் ஓட்டுநர்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே கனமழையால் மிகவும் சேதமடைந்துள்ள விகேடி சாலையை போர்க்கால அடிப்படையில் நகாய் திட்ட அதிகாரிகள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: