ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கு தெரியாமல் புதிய ஆப்களை பயன்படுத்தும் பாக். தீவிரவாத அமைப்புகள்: குறைந்த இன்டர்நெட்டிலும் வேகமாக செயல்படும்

ஸ்ரீநகர்: வாட்ஸ்ஆப் தனியுரிமை கொள்கைகள் குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் நேரத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் துருக்கி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய செயலிகளை பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் 2ஜி இன்டர்நெட் சேவை மட்டும் தொடங்கப்பட்டது.

இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டதால் தீவிரவாத அமைப்புகளின் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை பயன்படுத்துவது தடுக்கப்பட்டது. சமூக ஊடகங்கள் மூலமாக ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த தீவிரவாத குழுக்கள் இதனால் முடங்கின. மேலும், சமூக வலைதளம் மூலமாக ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் புதிய செயலிகளை பயன்படுத்த தொடங்கி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலகளாவிய வலைதள செயல்பாட்டில் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்ட செயலிகளை தீவிரவாத குழுக்கள் பயன்படுத்தி வருகின்றன. தொடர்ந்து தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட என்கவுன்டர், ராணுவம் முன் சரண் அடைந்த தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 புதிய செயலிகளை தீவிரவாத குழுக்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

இந்த செய்தியை பெறுநரால் மட்டுமே பார்க்க முடியும், மூன்றாம் நபர் தலையிட முடியாதபடி பாதுகாப்பு வசதி கொண்டதாகவும் இருப்பதால், தீவிரவாத அமைப்புகள் இவற்றை எந்தவிட அச்சமுமின்றி பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த செயலிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. குறிப்பாக இந்த செயலிகள் குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் இயங்கும் திறன் கொண்டவை. அமெரிக்கா நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு செயலி, 2வது ஐரோப்பிய நிறுவனம் உருவாக்கிய செயலியாகும். மூன்றாவதாக துருக்கி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட செயலியாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஆட் சேர்ப்பு நடவடிக்கைக்காக இந்த செயலியை இதனை தீவிரவாதிகள் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

Related Stories: