ஆஸ்பத்திரிக்கு சென்ற போது 108 ஆம்புலன்சில் ‘குவா குவா’

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி சின்னசெங்குளம் மலை கிராமத்தை சேர்ந்த கெஞ்சன் என்பவரின் மனைவி ரோஜா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று பிரசவ வலி ஏற்படவே, பர்கூர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சின்னசெங்குளம் சென்ற 108 ஆம்புலன்ஸ் அங்கு ரோஜாவை ஏற்றிக்கொண்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒன்னகரை என்ற இடத்தில் வரும்போது  ரோஜாவுக்கு மிக அதிகமாக பிரசவ வலி ஏற்படவே, ஓட்டுனர் ஜீவா மலை பாதையிலேயே ஓரமாக வண்டியை நிறுத்தினார்.

இதனையடுத்து மருத்துவ உதவியாளர் சிவா ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து ரோஜாவிற்கு பிரசவம் பார்த்தார்.  பிரசவத்தில் ரோஜாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயையும் சேயையும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: