டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: டி.என்.பி.எஸ்.சி பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னை குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காவல் ஆணையர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக புரசைவாக்கம், அரசப்ப தெருவை சேர்ந்த நாகேந்திர ராவ் (54), மந்தைவெளி, மே பிளவர் கார்டன் பகுதியை சேர்ந்த ரமணி (எ) வெங்கடாசலம் (57) ஆகிய 2 பேர் மீதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கி ஏமாற்றி மோசடி செய்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு, மரபுசார் குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் 2 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு, மரபுசார் குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்ததின் பேரில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: