சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய தமிழ் புத்தக விற்பனை நிலையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக விற்பனை அரங்கத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதல் காதல், புத்தகங்கள் மீது தான். அந்த வகையில் ஜெயலலிதாவின் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன.
இந்த வேதா இல்லம் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வருகிற 28-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதுதவிர ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அம்மா அறிவு மையம் மற்றும் அருங்காட்சியகம் உருவெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அம்மா நினைவிடம் வருகிற 27-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடத்தை சென்னைக்கு வரும் மக்கள் பார்த்து செல்லக்கூடிய ஒரு கோவிலாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கும்.