புதுடெல்லி: ‘குடியரசு தினத்தன்று டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணி நடத்தலாம்,’ என்று 3 மாநில காவல் துறை அதிகாரிகள் தெரிவித்த யோசனையை விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளன. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், மத்திய அரசுடன் இதுவரை நடத்தியுள்ள 10 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியை தழுவியுள்ளன. இதனால், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க, வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்டமான அளவில் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ‘பேரணிக்கு அனுமதி அளிப்பது பற்றி டெல்லி காவல் துறைதான் முடிவு செய்ய வேண்டும்,’ எனக் கூறி, தடை விதிக்க உச்ச நீதிமன்ற்ம மறுத்து விட்டது. இதனால், பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் டெல்லி, அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.