மதுரை: சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஜெயலலிதா இருந்தபோது எல்லோருமே அவருடன் நல்ல உறவோடுதான் இருந்தோம் என பதில் அளித்தார். மதுரை, ஆரப்பாளையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் ஜன. 19 வரை 98.50 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். தொடர்ந்து, ‘சசிகலாவை சேர்த்துக் கொள்வீர்களா? மூத்த அமைச்சரான நீங்கள் அவரை சந்தீப்பீர்களா?’ என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘ஜெயலலிதா இருந்தபோது, எல்லோருமே அவருடன் நல்ல உறவோடுதான் இருந்தோம். தற்போது, அனைவரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வரவேற்கின்றனர். இனிமேல் அவரது ஆட்சி அமைந்திட உறுதுணையாக இருந்து உழைப்போம்’’ என்றார்.