முடிந்தால் இரண்டு தொகுதி: வரும் சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன்...மம்தா பானர்ஜி அறிவிப்பு.!!!

நந்திகிராம்: நான் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தமிழகம், அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும் தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சுவேந்தி அதிகாரி தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, மேற்கு வங்கம் வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சுவேந்தி அதிகாரி தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, நான் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். முடிந்தால் நான் பவானிபூர் மற்றும் நந்திகிராம் இரண்டிலிருந்தும் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.  

கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து ஆதிகாரி, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: