ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் தலைமையில் ஆவடியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் சமுத்துவ பொங்கல் விழா ஆவடி மாநகரம், கோணாம்பேடு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவிற்கு, மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணாசாமி வரவேற்றார். ஆவடி நகர பொறுப்பாளர்கள் பேபி வி.சேகர், ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழர் பாரம்பரிய முறையில் பெண்களுடன் பொங்கல் வைத்தார். இதனை அடுத்து, பொய்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், கிராமிய இசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. மேலும், திருவள்ளூர் மத்திய மாவட்ட எல்லை முதல் விழா மேடை வரை மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இதோடு மட்டுமல்லாமல், வழியெங்கும் சாலையின் இருபுறங்களிலும் கொடிகள், டிஜிட்டல் பேனர்கள், வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டிருந்தன.