சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்குப் பொதுமக்களின் கருத்தினைக் கேட்கும் “பொது விசாரணை” ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதானி குழுமத்திற்காகத் தமிழகத்தின் பொருளாதார நலனையும் - சுற்றுப்புறச் சூழலியல் பாதுகாப்பையும் அ.தி.மு.க. அரசும் - மத்திய பா.ஜ.க. அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தாரைவார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சென்னை அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்குத் தேவைப்படும் 6110 ஏக்கர் நிலங்களில் 2291 ஏக்கரைப் பொதுமக்களிடமிருந்தும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமாக உள்ள தனியார் நிலம் 1515 ஏக்கரையும் அதானி குழுமத்திற்கு அள்ளிக் கொடுக்க - அடாவடியாகப் பெற்றுக் கொடுக்க அதிகார துஷ்பிரயோகம் நடைபெறவிருக்கிறது.