தமிழகம் முழுவதும் 18ம் தேதி முதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரிகளை ஒப்படைக்கும் போராட்டம்: மாநில சம்மேளனம் அறிவிப்பு

சேலம்: தமிழகம் முழுவதும் 18ம் தேதி முதல் எப்.சி.,க்கு செல்லும் லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகி தெரிவித்துள்ளார்.

 மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் நேற்று அளித்த பேட்டி: லாரி ஸ்டிரைக்கின் போது அதிகாரிகளிடம் நடந்த பேச்சு வார்த்தையில் வேகக்கட்டுப்பாட்டு கருவிக்கு சான்றிதழ் இருந்தால் போதும் என்றும், 80 கிலோ மீட்டருக்கு கீழ் இயக்கப்படும் லாரிகளுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவியை ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதோடு லாரிகளுக்கு எப்.சி. செய்வதையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் 5,000 லாரிகள் எப்.சி. செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தையில் அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்படும் அதிகாரிகளை கண்டித்து வரும் 18ம் தேதி முதல் எப்.சி., செல்லும்  லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டத்தில் லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: