சண்டிகர்,:அரியானா மாநில பாஜ கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் கூறினார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் எல்லையில் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், அரியானா பாஜ மூத்த தலைவரான அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலையிலான அரசுக்கு கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த சவுதாலா (துணை முதல்வர்) கடந்த சில வாரங்களாக நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால், கூட்டணி கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது.