திருச்சி: டெல்டா மாவட்டமான, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுகை உள்ளிட்ட மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் நேற்று வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. நாகை மாவட்டத்தில் நாகையில் 200 ஏக்கர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், வேதாரண்யத்தில் 1லட்சத்து 5ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறையில் 10ஆயிரம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர், தஞ்சை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கே.பேட்டை, வதியம், மனகட்டை, மருதூர், வளையபட்டி, இனிங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் 5ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, திருவெறும்பூர், மணிகண்டத்தில் 1000 ஏக்கர் என டெல்டா மாவட்டம் முழுவதும் 2லட்சத்து 41ஆயிரத்து 200 ஏக்கர் சம்பா பாதிக்கப்பட்டுள்ளது.