எஸ்பி, நீதிபதிகள் முகாம் ஆபீஸ் உள்ள நாகை புதிய கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் பைக் ரேஸ்

நாகை: நாகையில் எஸ்பி மற்றும் நீதிபதிகள் முகாம் அலுவலகம் அமைந்துள்ள புதிய கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் பைக் ரேசில் செல்லும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். நாகை புதிய கடற்கரை செல்லும் சாலையில் எஸ்பி முகாம் அலுவலகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு, திட்ட இல்லம், சுற்றுலா மாளிகை, அரசு அலுவலர்கள் வசிக்கும் ஹவுசிங்யூனிட் என நிறைந்து உள்ளது.

மேலும் புதிய கடற்கரைக்கு இந்த சாலை வழியாகவே பெண்கள் மற்றும் குழந்தைகள் நடந்து செல்வார்கள். சிலர் குடும்பத்தோடு வாகனங்களில் செல்வார்கள்.

இந்நிலையில் இரவு நேரங்களில் இந்த சாலையில் வாலிபர்கள் பைக்கில் ரேஸ் செல்வதும், ஒருவரையொருவர் முந்தி செல்லும் போது கூச்சலிட்டபடி செல்வதும் தொடர்ந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுவதுடன், புதிய கடற்கரைக்கு செல்வோர்களும் அச்சம் அடைகின்றனர். எஸ்பி முகாம் அலுவலகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ள இந்த சாலையில் இரவு நேரங்களில் இதுபோல் பைக் ரேசில் செல்லும் வாலிபர்களை போலீசார் தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

Related Stories: