மதுரை: மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: செல்போன் ஆன்லைன் மூலம் கடன் பெறும் வகையில் புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் இவை செயல்படுகின்றன. இந்த செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சுமார் 50 செயலிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. செல்போன் செயலி மூலம் கடன் வழங்குவோர் அதிகளவிலான வட்டி வசூலிக்கின்றனர். கடன் தவணையை முறையாக செலுத்தாதவர்களின் விபரங்கள், புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, செல்போனில் தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்கின்றனர். ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.