ஜனவரி 20-ஆம் தேதிக்கு பின்னர் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்: கமலா ஹாரிஸ் அதிரடி

நியூயார்க்: வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். 2020-ஆம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்து உள்ளது எனவும் ஜனவரி 20க்கு பின்னர் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம் என்றும் கமலா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது 2020-ஆம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம்முதல் இனப்பாகுபாடுவரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது துணிவாக பணிகளை மேற்கொண்ட முதல்நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். 2021 ஆம் ஆண்டு எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும். சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என கமலா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவுவரை கோலாகலமாக நடைபெறும்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை முன்னிட்டு அங்கு பொதுமக்கள் கூடாமல் போலீசார் பாதுகாத்து வந்தனர். இரண்டு கோடிபேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், 3 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் திட்டமிட்டு வருகிறார். அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த ஜனநாயக கட்சி அரும்பாடுபட வேண்டியிருக்கும் என்பதற்கு சந்தேகமில்லை.

Related Stories: