திருப்பதி கோயிலில் நள்ளிரவில் பக்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று கோயில் முன்பாக ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி கேக் வேட்டி, கற்பூரம் ஏற்றி ஆரத்தி காண்பித்து கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு நிபந்தனைகளுடன் திருமலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி முதல் நாளை மறுதினம் (3ம் தேதி) வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளதால் ரூ300 முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டையொட்டி கோயில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள், ‘ஹேப்பி நியூ இயர்’ என கோஷமிட்டபடி கேக் வெட்டினர். பின்னர் கோயில் கோபுரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக நேற்றிரவு 11.30 மணியளவில் கோயில் நடையடைக்கப்பட்டிருந்தது. சரியாக நள்ளிரவு 11.55 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் மூலவர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் உள்பகுதி முழுவதும் சுமார் 4 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

ரூ2.91 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் 42,161 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில், ரூ2.91 கோடி காணிக்கை கிடைத்தது.

Related Stories: