மதுரை: கீழடி, ஆதிச்சநல்லூரில் 2021 செப்டம்பர் வரை அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதித்துள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வுகள் மூலம் வரலாற்று சிறப்புமிக்க ஆற்றங்கரை நாகரிகம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் தமிழர்களின் பழங்கால நாகரிகம் மற்றும் பண்பாட்டு திறனை நம்மால் அறிய முடிகிறது. இதேபோல், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராஜவள்ளிபரம்பு, பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரம்பரம்பு, வடக்கு வள்ளநாடு, அகரம், முரப்பநாடு, திருப்புளியங்குடி, திருவைகுண்டம், குறும்பூர் நல்லூர், கொற்கை, காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம் உள்ளிட்ட 32 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்கும்.