2,500 பேருடன் அரசு வழிகாட்டுதலுடன் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டு திருப்பலி: முதல்முறையாக திடலில் இன்று நள்ளிரவு நடக்கிறது

நாகை: வேளாங்கண்ணி பேராலயத்தில் 2,500 பேருடன் ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சிகள் இன்று நள்ளிரவு நடைபெறும் என்று பேராலயம் சார்பில் தெரிவித்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இவ்வாறு பல்வேறு சிறப்பு பெற்ற இந்த ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். டிசம்பர் மாதம் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெறும். இதில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொள்வர்கள். திருப்பலி முடிவில் வெடிகள் வெடித்து ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடத்துவது தொடர்பாக பேராலயம் சார்பில் கலெக்டர் பிரவின்பிநாயரை சந்தித்தனர்.

இதில் 2,500 பேருடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆங்கில புத்தாண்டு திருப்பலி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பேராலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பேராலயத்தை சுற்றி மரம், செடி கொடிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஏற்பாடாக தியான மண்டபம் செல்லும் வழியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் மற்றும் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடத்த திறந்த வெளி கலையரங்கமான சேவியர் திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திடலில் தான் முதல் முறையாக கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி கடந்த 25ம் தேதி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Stories: