ஆயுதப்படை சிறப்பு சட்டத்தின் கீழ் பதற்றமிக்க பகுதியாக நாகலாந்து அறிவிப்பு
புதுடெல்லி: நாகலாந்தை பதற்றமான பகுதியாக அறிவித்துள்ள மத்திய அரசு, அடுத்த 6 மாதங்களுக்கு அங்கு ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகலாந்து. இங்கு உள்நாட்டு தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுத போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பாதுகாப்பு படைகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இவர்கள் ஒடுக்கப்பட்டன. இந்நிலையில், சமீப காலமாக மீண்டும் அங்கு பதற்றம் காணப்படுகிறது. இதன் காரணமாக, ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி, இம்மாநிலத்தை பதற்றம் நிறைந்த பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதன்படி, அடுத்த 6 மாதங்களுக்கு இங்கு சந்தேகத்துக்குரிய யார் மீது வேண்டுமானாலும் பாதுகாப்பு படை நடவடிக்கை எடுக்க முடியும். கைது செய்து விசாரணை நடத்த முடியும்.