திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின் 6வது நாள் பிரணய கலக உற்சவம் நடத்தப்படுகிறது. பிரணய கலக உற்சவம் என்பது கோபத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மலையப்ப சுவாமியை சமாதானப்படுத்துவதாகும். அதன்படி, நேற்று மாலை 5 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரணய கலக உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, தேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி கோயில் தெப்பக்குளம் அருகே உள்ள வராக சுவாமி கோயில் எதிரே வந்தனர். மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வராக சுவாமி கோயிலுக்கு எதிர் திசையில் வந்தார். அப்போது, தாயார்களை சமாதானப்படுத்தும் வகையில் ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் இருதரப்பிலும் எதிர், எதிர் திசையில் நின்றனர். பின்னர், மலையப்ப சுவாமி தரப்பில் ஜீயர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியும், புராண இதிகாசம் படித்தும் தாயார்களை சமாதானப்படுத்தினர்.