இலவச பாடப்புத்தகங்கள் சிக்கிய விவகாரம்: காயலான் கடை உரிமையாளர் கல்வித்துறை ஊழியர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவர் காயலான் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருந்தது அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக் கப்பட்டது.  இதில் 2,066 கிலோ எடையுள்ள 3,134 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கடை உரிமையாளர் பெருமாள்சாமியை போலீசார் விசாரணை செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள அரசு புத்தக கிடங்கின் பொறுப்பாளரும், மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளருமான மேகநாதன் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து மேகநாதன் (40), பெருமாள்சாமி (55) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் கூறுகையில், மாணவர்களுக்கு வழங்க கூடிய இலவச பாடப்புத்தகங்களை காயலான் கடையில் விற்ற இளநிலை உதவியாளர் மேகநாதன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்  என்றார்.

Related Stories: