பெங்களூரு: தங்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தேசதுரோகிகள் பட்டம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் மாநில செயல்தலைவர் சதீஷ்ஜார்கிஹோளி தெரிவித்தார். பெலகாவி மாவட்டம் கோகாக் நகர் கில்கார்டனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 136ம் ஆண்டு விழா, மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயல்தலைவர் சதீஷ்ஜார்கிஹொளி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் விமான நிலையம், ரயில் நிலையம், பெட்ரோலியம், பி.எஸ்.என்,எல். உட்பட பல்வேறு வளர்ச்சிகளை கஷ்டப்பட்டு 70 ஆண்டுகளாக பராமரித்து வந்தது. ஆனால் இவைகளை 7 ஆண்டுகளில் பா.ஜ.வினர் விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் காங்கிரஸ் 70 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்று பா.ஜ.வினர் தெரிவித்து வருகின்றனர். நாங்கள் எதையும் செய்யாமல் இருந்தால் விமான நிலையம், ரயில் உட்பட அனைத்தையும் உங்களால் எப்படி விற்பனை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.