அதிமுகவுக்கு தலைவர்கள் துரோகம் இரட்டை இலையை முடக்க சதி: அமைச்சர் சி.வி.சண்முகம் பகீர் தகவல்

விருத்தாசலம்: அதிமுகவுக்கு தலைவர்கள் துரோகம் செய்திருக்கிறார்கள், இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் விருதாசலம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மகாலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:

 ஜெயலலிதா இருந்தபோது ஓட்டு வாங்கி கொடுத்து விடுவார் அதனால் தைரியமாக இருந்தோம். இன்று நிலைமை அப்படி இல்லை எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாமல் பொதுத்தேர்தலை சந்திக்கப் போகிறோம். எம்ஜிஆர் வாரிசு  இரட்டை இலை தான். ஆனால் நமது சின்னத்தை முடக்க சிலர் சதித்திட்டம் தீட்டி வருகின்றனர்.டிடிவி தினகரன் அணிக்கு சென்றவர்கள் மறுபடியும் வந்து விட்டார்கள்.

அதிமுகவிலிருந்து ஒரு தொண்டனாவது விலகி சென்றுள்ளானா? பதவி அனுபவித்தவர்கள் தான் மாறிப்போனார்கள். வெற்றிக்கு உழைத்தவர்கள்  யாரும் உழைத்தேன் என்று வரமாட்டார்கள். உழைக்காத 4 பேர் மட்டும் தான் நான் கட்சிக்காக உழைத்து கொடுத்தேன் என்று கூறிக்கொண்டு வருவார்கள். நமது கட்சியில் சில தலைவர்கள் வேண்டுமானால் கட்சிக்கு துரோகம் செய்திருக்கலாம். ஆனால் தொண்டர்கள் யாரும் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். கூட்டணிகள் இருந்தால் அவர்களுக்கும் சீட் ஒதுக்கப்படும். அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் நாம் வெற்றி பெற முடியும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: