சென்னை: பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜமீன் கொரட்டூரில் தனியார் மரைன் இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் 172 வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12.50 மணி அளவில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி உள்ளனர். அப்போது மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவன் ஆதித்யா ஷர்மா(20) என்பவர் தொண்டையில் அளவுகோலால் குத்தியதில் தொண்டை கிழித்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.